Thursday, September 17, 2020

புறந்தள்ளப்பட்டவர்கள்

 

18 ஜூலை 2018
புறந்தள்ளப்பட்டவர்கள்

மனித அறிவு வளர்ச்சிப் பாதைக்கு பயணங்கள் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பைச் செலுத்துபவையாக இன்றளவும் இருக்கின்றன. அதனால்தான் பயண அனுபவங்கள்  புத்தகங்களாகவும் அறிவு வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட அங்கமாகவும் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக தொடர்வண்டி பயணங்கள் அபரிமிதமானதொரு அறிவுத்தோற்றவியலை உண்டாக்க வல்லது. தொடர்வண்டிப் பயணங்கள் பல தருணங்களில் மனதின் வலியைக் கூட்டி விடுகின்ற தன்மையைக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு வலிமிகுந்த தருணத்தை இன்றைய தொடர்வண்டி பயணமும் கொடுத்தது.

அரக்கப் பரக்க ஓடி வந்து தொடர் வண்டியில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு இருக்கையை பிடித்து, அமர்ந்து, நம் வேகத்துக்கு ஈடுகொடுக்க அரும்பாடுபட்ட நுரையீரலை சாந்தப்படுத்துவதற்காக அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து,  சற்று நிதானித்து,
கண்களைச் சுழல விடுவோம்.

இயல்புதான்.  அந்த கணம்

ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிழிந்த அழுக்கு தோய்ந்த தன்னுடைய அங்கிகளோடு அந்த தொடர்வண்டிப் பெட்டிக்குள் நுழைகிறார். மடமடவென தன்னுடைய சட்டையை கழற்றி தொடர்வண்டிப் பெட்டியின் பிளாட்பாரத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறார். சக பயணிகள் அவருக்கு ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை கொடுக்கின்றனர். அந்த கணம் ஒருவிதமான வலி தொற்றிக்கொண்டது. இயல்பாகவே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதற்காக திரும்புகிறேன். அங்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மையார் ரயில் நிலையத்தில் அந்த தொடர்வண்டி இடையில் குவிந்து கிடந்த மனித மலத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்தார்.  இன்னொரு பெண்மணியும் குப்பையையும் குப்பைக் கூடையும் குப்பை அள்ளுவதற்கான ஒரு முறத்தையும் கையில் வைத்துக் கொண்டு  குப்பைகளைத் தேடிப்பிடித்து, இல்லையில்லை வழித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காட்சி மனதின் வலியை இன்னும் இரட்டிப்பாக்குகிறது. 

இதுதான் நாம் பெரும்பாலும் விவாதித்துக் கொண்டிருக்கும் விளிம்புநிலை மக்களின் உடைய வாழ்வியலில் ஒரு கூறு. இந்த அடிமட்ட தொழிலாளர், தூய்மை தொழிலாளர் அல்லது இன்னும் பல பெயர்களில் சொல்லப்படும் இவர்கள் இந்தியச் சாதியச் சட்டகத்தில்  கடைக்கோடி  அடுக்கில் இருக்கக்கூடியவர்கள்.

இன்றைக்கு இவர்கள் மட்டுமே எப்படி அத்தகைய பணிகளுக்கானவர்களாக ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்ற பொருண்மையை உள்ளடக்கிய, பின்னரசியலை வெளிக்கொணர்ந்து, இவர்களின் மீதான இழி பார்வையை துடைத்தெறிய இடதுசாரிகளும் சமூக சிந்தனையாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்றாலும்  இந்தக் கடைநிலை அடுக்குதான் இன்றைக்கும் இத்தகையதான பணிகளுக்கு வருகிறது அல்லது கவனம் பெறுகிறது. 

ஆனால் தூய்மைப் பணியாளர் என்ற அடையாளத்துக்குள்ளோ அல்லது சாதியச் சட்டகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் சாதிய உடல் என்ற அடையாளத்துக்குள்ளோ இல்லாத இந்த தன்னுடைய சட்டையைக் கழற்றி தூய்மை செய்யும் இந்த குடும்ப நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட நபர் அத்தகைய கவனத்திற்கு வரவில்லை. ஏன் என்றால் அவர் குழுவாக இல்லை. அதாவது புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற சட்டகத்துக்குள் இத்தகையவர்கள் குழுவாக இல்லை. இதனால் அவர்கள் குழு அரசியலுக்குள் நுழைய வில்லை. ஆக, இந்த அடித்தட்டு, விளிம்புநிலை மக்கள் அல்லாமல் அவர்களாலும்  கண்டுகொள்ளப்படாமல் புறந்தள்ளப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் இந்த சமூகத்தால் இன்றைக்கும் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதாவது விளிம்பின் விளிம்பாலும் புறந்தள்ளப்படும் அல்லது கண்டுகொள்ளப்படாத இத்தகைய மனிதர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். இதற்கு இன்றைய உலகமயச் சூழல் முழுமையான காரணமாக இருக்கிறதை நாம் அவதானிக்க முடியும்.

இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் யார்? என்ன? என்ற வினாக்களை எழுப்பி அவரைத் தேட முனையும் போது அவர் சாதிய கட்டுமானத்தில் ஏதாவது ஒரு அடுக்கில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார் என்பது நாம் அறிந்தது. சுய அடையாளங்களை இழந்த இவர் ஒரு தனிப்பட்ட தனிமைப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அல்லது, தன்னை அத்தகைய பின்புலத்தில் இருந்து விடுவித்துக்கொண்ட  அந்த மனிதன் இன்றைக்கு உழைப்புச்சக்தி வணிக  அரசியலுக்குள் குரல் கொடுக்க முடியாத நபராக, விளிம்புநிலை அரசியல் தளத்தில் அவருக்காக குரல் கொடுக்கும் மனிதர் இல்லாத களத்தில் அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

_யாரினும் இனியன் பேரன்பினன்.

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...