Thursday, October 9, 2025
இருளி - அதிகாரத்தை மறுதலிக்கும் பின்னைக் காலனியப் பிரதி
கல்வி அடித்தள மக்களின் வாழ்க்கையில் உருவாக்கிய பெரும் பெரும் மாற்றங்களைக் காட்டிலும் (அது முழுமையான மாற்றங்களை உருவாக்கி விடவில்லை என்றாலும் கூட) அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கவாதிகளின் மனவெளிகளில் நிகழ்ந்த அதிர்வுகளும் அச்சங்களும் மீண்டும் நினைவுகளுக்குக் கொண்டு வரப்பட்டு கதையாடப்பட வேண்டும்.
அதிகாரங்கள் நிலைகுலைந்து போன அந்த வரலாறுகள் சமநிலைச் சமூகத்திற்கான அடிப்படைகளை உருவாக்கித் தரும்.
அதிகாரத்திற்கு எதிராக உண்மைகளை பேசுவது என்பது அதிகாரத்தின் இயலாமைகளைச் சுட்டிக் காட்டுவதும் தடுமாற்றங்களை அடையாளப்படுத்துவதும் தோல்விகளைக் கொண்டாடுவதும் தான். -
சாரோன் அதைச் செய்ய முயன்றிருக்கிறார்.
-- இருளி- சாரோன் .
பன்றிகளுக்குப் பூஜை அறையும் கக்கூஸ் குழியும் இரண்டும் ஒன்றுதான்.......
முன்பு அவர்களது கக்கூஸ்களை மொய்த்த ஈக்கள் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைந்ததைப் போலவே இப்போ அவர்களது மலங்களைத் தின்ற பன்றிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்து அவர்களது மலங்களாலேயே அந்த வீட்டை நாறடித்தன. (ப.120)
மனித மலத்தை இன்னொரு மனிதனைக் கொண்டு தன்னுடைய அதிகாரத்தால் அள்ளச் செய்யும் இந்த இழிநிலை இன்னமும் சமூகத்தில் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிற சூழலில் நாவல் முக்கியமானது ஒரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதாக நினைக்கிறேன்.
ஆதிக்கச் சமூகத்தின் ஆழ்மனதில் உறைந்து கிடக்கிற, பீ நாற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் பிரதி.
Monday, June 9, 2025
ஆளண்டாப் பட்சி என்னும் இடைநிலைப் பிரதி
ஆளண்டாப் பட்சி என்னும்
விளிம்பை மையமாக்கும் இடைநிலைப் பிரதி
(மையங்கள்தான் விளிம்புகளைத் தீர்மானிக்கின்றன)
நிலப் பகிர்வில் வஞ்சிக்கப்பட்ட குடியானவன், பெரு நில உடமையாளனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடும் கதையை அடிப்படையாகக் கொண்டது பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி நாவல்.
நாவலின் கதைக்களத்திற்கு மையச்சரடாக இருப்பது குடியானவர் முத்துவின் வாழ்க்கை. இந்த மையத்தை அண்டிப் பிழைப்பதாக, ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர்களின் பிரதிநிதியான குப்பண்ணாவின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் நிரம்பி இருக்கும் இவ்விரு கதாபாத்திரங்களில் ‘முத்து’ தான் நாயகன்.
அதாவது, ஆளண்டாப் பட்சி என்ற கற்பனைப் பறவையைக் குறியீட்டாக்கம் செய்கிற குடியானவர் முத்துவின் குடும்பம் - நிலம் தேடி, வாங்கி, பெரு நிலவுடமையாளனாக உயரும் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் முத்துவுக்கு உறுதுணையாக குப்பன் இருக்கிறார்.
எப்போதும் ஐயம் கொள்கிற அல்லது கொள்ளச் செய்கிற வாக்கியங்களை மட்டுமே உதிர்ப்பது அதிகார பீடத்தின் சிறப்பு அம்சம். அந்த அம்சத்தில் முழு தாத்பரியத்தையும் முத்துவின் சொல்லாடல்களில் (குறிப்பாக. நாவலின் இறுதிப் பகுதியில்) காண முடியும்.
வரலாறு நெடுகிலும் இந்தப் புறந்தள்ளப்பட்டவர்கள்தான் தள்ளுபவர்களை (அதிகார மையம்) அண்டிப் பிழைக்கிறதான / அண்டி தான் பிழைக்க வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுயமற்றவர்களாகவே கட்டமைக்கப்பட்ட இவர்களின் இயல்பான குணங்களாகவே விட்டுக் கொடுத்தல், எதற்கும் ஆசைப்படாதிருத்தல், எதிர்பாராதிருத்தல், சொத்தாசை இன்மை, அடங்கிப் போதல் போன்ற அடிமைப்புத்தி குணங்கள் அத்தனையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடிமைச் சாதியினனான குப்பண்ணனின் பாதங்களுக்கு கீழ் ஊறிய நீர் தானே என உணர்வு கொப்பளிக்கச் சொல்லும் அதே முத்து, பொதுவெளியில் இயங்கும் போது தன்னைச் சாதி கடந்த மனிதனாகக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இது, சாதிய அடுக்கதிகாரமாயினும் பால்நிலை அதிகாரமாயினும் பொருந்துமாற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் படைப்பாளனின் மொழிநடையில் மைய அதிகாரம் உறைந்து கிடக்கிறது.
வழக்கம்போல, விளிம்பின் மொழி மறுக்கப்பட்டு அல்லது தன்வயப்படுத்திக் கொள்வதை இயல்பான ஒன்றாகக் கதைப்படுத்தி பிரதியாக்கம் நெய்யப்பட்டுள்ளது.
Thursday, March 13, 2025
நான் பேரன்பினன், அவள் பேரன்பினள்
நான் பேரன்பினன், அவள் பேரன்பினள்
நான் காதலால் கசிந்துருக,
அவள் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறாள்.
என் வார்த்தைகள் மௌனமாய் வீழ,
அவள் பார்வையாள்
கவிதையாய் மாற்றினாள்.
அவள்தன் பாதம்,
என் பாதை மாற்றியது.
அவள்தன் பார்வை,
என்னைப் பாவையாக்கியது.
அவளின் புன்னகை,
என் நாட்களின் வசீகரம்.
அவளின் மௌனம்,
என்னைச் சிற்பியாக்கியது.
உடை களைந்து
நாம் உருகிப் போகும் தருணம்,
நம் உருமாறி,
தடுமாறி
உறைந்து போகிறோம்.
உறைதலில் இருந்து மீள்கிறோம்,
காம பானத்தின் காதல் வில்லிலிருந்து.
அவளின் பேரழகின் பிரதிபலிப்பு நான்.
அவள் கனவில் மலர்ந்த நிழல் நான்.
அவள் சிரிப்பின் ஒலியில் நான் இசை.
அவள் உரையாடலில் மறைந்த கவிதை நான்.
என் கண்களின் தூரிகையால் வரைந்த
பேரழகுப் பதுமை அவள்.
பதுங்கு குழிகள் இல்லை
பதுங்கிக் கொள்ள
ஆம்....
நினைவில் பார்த்துக் கொண்டே
ஓய்ந்து விடுவேன் பாருக்குள்ளே.
சொல்லாமலே நீளும் பேரன்பு.
என் காவியக்காரியின் பொன் அன்பு.
அவள் - பொன் நிற பாதம் பொழுதுகளின் ஒளியாக .....
வெண்ணிற மேகம் தடுமாறும் பேரழகியவள்.
என் சுவாசக் கூட்டில் வாசம் செய்கிறாள்.
நான் பேரன்பினன், அவள் பேரன்பினள்.
Subscribe to:
Posts (Atom)
இருளி - அதிகாரத்தை மறுதலிக்கும் பின்னைக் காலனியப் பிரதி
கல்வி அடித்தள மக்களின் வாழ்க்கையில் உருவாக்கிய பெரும் பெரும் மாற்றங்களைக் காட்டிலும் (அது முழுமையான மாற்றங்களை உருவாக்கி விடவில்லை என்றாலும...
-
ஆளண்டாப் பட்சி என்னும் விளிம்பை மையமாக்கும் இடைநிலைப் பிரதி (மையங்கள்தான் விளிம்புகளைத் தீர...
-
நான் பேரன்பினன், அவள் பேரன்பினள் நான் காதலால் கசிந்துருக, அவள் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறாள். என் வார்த்தைகள் மௌனமாய் வீழ, அவள் பார்வையாள் ...

