Monday, October 8, 2018
தேன்சிட்டும் கிராமத்தானும்
Sunday, September 23, 2018
அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல்
அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல்
நாடுபிடிக் கொள்கையோடு மன்னராட்சி காலத்தில் நடந்தேறிய அந்நியப் படையெடுப்புகளால் நிலைபெற்ற அரசாட்சி, ஆரியம், முகலாயம், ஐரோப்பியம் எனப் பல படிநிலைகளிலான புவியியல், கலாச்சாரக்காலனிய ஆட்சிகளின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குண்டு தொடர்ந்து நசுக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போன இந்திய, தமிழக மக்களின் மனவெளியை ஆக்கிரமித்துள்ள காலனியாதிக்க ஏகாதிபத்தியப் பண்பாடுகளை அதன் கற்பித வரலாறுகளை இனங்கண்டு தோலுரிக்கும் பணியை விளிம்பு நிலை இலக்கியங்கள் இன்றைக்குச் செய்து வருகின்றன. அத்தகைய காலனிய நீக்க விடுதலை இலக்கியங்கள் பின்காலனிய இலக்கியங்களாக வாசிக்கப்படும் சூழலில் 2014 ஆம் ஆண்டில் மணிமேகலைப் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட "சின்னானும் ஒரு குருக்கள்தான்!" என்ற ஆ. சிவராஜ் -இன் நாவல் பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய பிரதியாக இருக்கிறது.
சாதி ஆணவக்கொலைகளை ஓயாது ஆவணப்படுத்த வேண்டிய பெரும்பணியைக் காயடிப்பு அச்சம் சார்ந்த தொடர் பதற்றத்தில் இருக்கும் இச்சமூகம் வழங்கிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில் இந்த நாவல் நிகழ்த்திக்காட்டும் சாதியத் தகர்ப்புப் புனைவுவெளி அசாதாரணமானது.
நாவல் சாதிய அதிகாரம் இயக்கம்பெறும் எதார்த்தத்தை உள்ளது உள்ளபடி பேசியும் அதற்கெதிரான கலகக் குரல்களை தீவிரத்தன்மையோடு முன்னிறுத்தியும் தலித் விடுதலையைப் பிரதிவழி சாத்தியப்படுத்தியும் நகர்ந்து பின்காலனிய எழுத்து வகைமைக்குள் தன்னை இருத்திக் கொள்கிறது. கதை சொல்லியின் மொழி இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் கலந்து கட்டி இயக்கம் பெறுகிறது. இது பாத்திரங்களின் உரையாடலையும் கதை சொல்லியின் சொல்லல் முறையையும் வேறுபடுத்திக் காண்பதில் மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரின் வழியான சாதிமறுப்புத் திருமணங்கள்தான் சரியான தீர்வு என்பதைப் பிரதி வழிமொழிகிறது. அத்தகைய புறமண முறைச் சாத்தியப்படுத்தும் சாதியத்தகர்ப்புக் காதல்கள் கிராமங்களில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை உண்மை நிகழ்வின் பின்னணியில் புனைவாக்கம் செய்கிறது.
வலசு கிராம தலித் மக்களின் (மாதாரிகளின்) வாழ்வியலை ஆவணப்படுத்தும் இக்கதை பெருமாள் முருகனின் கூளமாதிரி நாவலைச் சில இடங்களில் நினைவுபடுத்தினாலும் அந்நிகழ்வுகள் பெருமாள் முருகன் என்ற படைப்பாளனின் பார்வைபோல் அல்லாமல் தலித்தின் பார்வையில் எதிர்க் கதையாடலாக முன்வைக்கப்பட்டுள்ளது. நாவலில் தொழிற்பட்டுள்ள விளிம்பின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அருந்ததியர் சாதியைச் சார்ந்த மக்களின் பண்பாடுகளை, சடங்குகளைப் படைப்பாளி காட்சிப்படுத்தும் பாங்கு இந்நாவலை முழுமையான இனவரைவியல் நாவலாக வாசிப்பதற்கான அகன்ற திறப்பைக் கொடுப்பதாக இருக்கிறது.
கதை நாயகனான சின்னான் இந்தியச் சமூகத்தில் உயர் சாதியாகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனச் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதாகவும் பின்பு அவனே குறிப்பிட்ட அக்கோவிலுக்குக் குருக்களாக மாற்றம்கொள்வதும் படைப்பாளனின் சமஸ்கிருதவயப்பட்ட போன்மை மனவெளியை உணர்த்துவதான வாசிப்புக்கு வழிகொடுக்கிறது. அதாவது, தலித்தைப் பிராமணனாக்கி பிராமணக் கருத்தியலை இருத்தி வைக்கிறது. அதாவது இதில் ஒரு வகையான ஏற்பு மனநிலை இருக்கிறது.. இது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும்.
ஆதிக்கச் சாதியினரின் வீடுகளில் வளர்க்கப்படும் மாமன்களுக்கான மணமகள்கள் இன்றைய பின்காலனியச் சூழலில் தன்னிலை உணர்ந்தவர்களாக, காதலின்றி மூடுண்டு கிடந்த அறைவேக்காட்டுப் பானைகளை உடைத்தெறிந்து தனக்கான இணையைக் காதலெனும் அன்பாயுதத்தால் தேர்ந்தெடுத்து புறமண முறைகளால் சாத்தியப்படுத்தி வருகின்றனர். அப்படிக் கிளர்தெழுந்த ஒருத்தியாக அடையாளப்படும் கதையின் தலைவி சாதிய அடுக்கில் உயர் இடமாகக் கருதப்படும் இடத்தில் இருந்தாலும் பெருளாதார பலமற்று விளிம்பில் இருத்தப்பட்டவளாகத்தான் இருக்கிறாள். இது ஒரு வகையில் சமூகப் பார்வையின் பின்புலத்தில் இரு குறையுடல்களை இணைக்கும் பணியைத்தான் செய்வதாக இருக்கிறது.
மொத்தத்தில் இப்பிரதி, இன்றைய பின்னைக் காலனிய சூழலில் அடித்தள மக்களின் வரலாற்றை எழுத முனையும் போக்கில் போதாமை மலிந்து கிடப்பதைத்தான் உணர்த்துவதாக இருக்கிறது.
ஜோ.செ. கார்த்திகேயன்
Saturday, September 22, 2018
செய்தி சேகரிப்பர்களின் இலக்கியாண்மை
செய்தி சேகரிப்பர்களின் இலக்கியாண்மை
இன்றைக்குச் சமூக மாந்தரினக் கண்களை ஈர்த்து தன்வசப்படுத்தி உள்ள கைப்பேசி உலகத்தை சுருக்கி விருந்தாக்கி கொடுத்துக்கொண்டு உள்ள சூழலில் ஒரு நிகழ்வு அல்லது ஒரு செய்தி உடனே சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்கிறது. அதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இது தவிர ஒவ்வொரு வீட்டின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ள தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களாலும் செய்திகள் உடனுக்குடன் வந்து சேர்கிறது. அதிலும் இன்றைக்கு செய்தி அலைவரிசைகளின் காலம் என்று சொல்லுமளவிற்கு செய்தி அலைவரிசைகளின் பெருக்கம் அதிகரித்து விட்டது. இவையெல்லாம் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் போட்டி போட்டுக்கொண்டு மக்களின் உணர்வுகளையும் வேட்கைகளையும் தூண்டி விட்டு செய்திகளை ஒரு வணிக பண்டங்களாக மாற்றிவிட்டுள்ளது.
இத்தகைய செய்தி ஊடகக் காலகட்டத்திலும் நாளிதழ்களின் செல்வாக்கு என்பது குறைந்து போனதாக இல்லை. அதாவது இன்றைக்கும் தினசரிகள் சமூகத்தை வாசிப்பதற்கான ஒரு திறவுகோலாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கான காரணம் காட்சி ஊடகங்களும் ஒலி ஊடகங்களும் முன் வைக்கும் செய்திகளின் நீதான மக்களின் நிலை நம்பிக்கையின்மை எனலாம். அதற்காக தினசரிகளில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை தன்மை நிரம்பியவை என்று பொருளல்ல. காட்சி ஊடகங்கள் மக்களின் கவனத்தை முதன்மைப்படுத்தும் வணிக அரசியலை உள்ளீடாகக் கொண்டு இயங்குவதை முதன்மையாக கொண்டுள்ளது என்றால் தினசரிகள் வேறு மாதிரியான அரசியலை உள்ளீடாகக் கொண்டு இயக்கம் கொள்கிறது. இது தினசரிகளில் செய்து சேகரிப்பாளர்களாக இருக்கும் செய்தி சேகரிப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தனிமனித அரசியலையும் சோம்பேறித்தனத்தையும் உள்ளீடாக கொண்டதாக இருப்பதை காண முடிகிறது.
உதாரணமாக, நகர்ப்புறங்களில் மாதந்தோறுமோ வாரந்தோறுமோ நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஒருவர் கொடுக்கும் அவரின் புரிதல் சார்ந்த மதிப்புரையை செய்தியாக, பார்த்தவுடன் கண்ணில் படும்படியான இடத்தில் பதிந்துவிடுகின்றனர். அச்செய்தியின் உண்மை தன்மை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் அச்செய்திகள் அந்நிகழ்வில் நடந்ததற்கும் அந்நிகழ்வில் நடந்ததற்கும் செய்தியாக வந்திருப்பதற்கு சிறிதும் தொடர்பில்லாதபடிக்கு தலைகீழாக்கம் செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பேசிய பேச்சாளரின் சிறந்த பேச்சு ஏதுமில்லாத குப்பையாக அடையாளப்பட்டிருக்கும். இவர்கள் பெறும் கல்வி நிறுவனப் போர்வையில் நிலைகொண்டிருக்கும் வணிக நிறுவனங்கள் நடத்தும் இலக்கியத் நிகழ்வுகளில் கலந்துகொண்டு செய்தி சேகரிப்பைக் கூட பொருளீட்டுவதற்கான தன்மையில் நிறுத்திக் கொள்கின்றனர் .
பத்திரிகைகளில் வரும் இலக்கியம் சார்ந்த செய்திகளில் இத்தகைய போக்குகள் காணப்பட்டாலும் எல்லா செய்திகளையும் செய்தி சேகரிப்பாளர்களையும் இவ்வகைமைக்குள் இருத்தி மதிப்பிட முடியாது. காரணம், சில செய்தி சேகரிப்பாளர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் தவறாது கலந்து கொண்டு முறையாக செய்திகளை எடுத்துச் சென்றதையும் / செல்வதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.
ஆக தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் என வரும் செய்திகளை நாம் உண்ணும் தன்மை நிரம்பிய செய்திகளாக எடுத்துக்கொள்ள முடியுமா என்ற எண்ணம் வலுவாக தோன்றுகிறது.
Thursday, September 20, 2018
மலக்குழி மரணங்களை வெளிச்சப்படுத்தும் - சவக்குழி சிறுகதை
சாதிக் காலனியத்தின் நுண் தளங்களோடு ஊடாடும் கூளமாதாரி
Wednesday, September 19, 2018
அர்த்தங்களைத் தள்ளிப்போடும் வாசகப் பிரதி - இரா.முருகனின் இசக்கி
சமூகக் கூட்டு நனவிலியின் அதிகாரத்தைக் கலைத்துப் போடும் க. வீரபாண்டியனின் தீராக்கடன் சிறுகதை.
ராமன் போன்ற காதாபாத்திரங்கள் ஆண்களின் வெளி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவும் உள்ளூர அதிகாரத்தை எதிர்க்கும் தறுவாயை எதிர்நோக்கியுள்ளதாகவும் புனையப்பட்டுள்ளது.
ப. சின்னச்சாமி
ஜெயமோகனின் 'நூறு நாற்காளிகள் " - விளிம்பின் மொழி மீதான அத்துமீறல்
Tuesday, September 18, 2018
குழு அரசியலும் தனிமனிதப் புறக்கணிப்பும்
அரக்கப் பரக்க ஓடி வந்து தொடர் வண்டியில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு இருக்கையை பிடித்து, அமர்ந்து, நம் வேகத்துக்கு ஈடுகொடுக்க அரும்பாடுபட்ட நுரையீரலை சாந்தப்படுத்துவதற்காக அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து, சற்று நிதானித்து,கண்களைச் சுழல விடுவோம்.
ஆனால் இந்தக் குழு அடையாளத்தைக் கடந்த, இந்த தன்னுடைய சட்டையை கழற்றி தூய்மை செய்யும் இந்த நபர் அத்தகைய கவனத்திற்கு வந்தாரா என்பது சந்தேகமே.. ஏனென்றால் அவர் தனித்து விடப்பட்டவர். அதாவது குழு அடையாள அரசியலுக்குள் இடம் பெற்றவர்கள் மனித சமூகத்திற்குள் புறந்தள்ளப்பட்டவர்கள். ஆனால் இத்தகைய தனிநபர்கள் மனித சமூகத்திலிருந்தே புறந்தள்ளப்பட்டவர்கள். அதனால் தான் இவர்களால் குழு அரசியலுக்குள் நுழைய முடியவில்லை. அதாவது இவர்கள் இன்னும் குழுவாக சேரவில்லை. ஆக, இந்த அடித்தட்டு விளிம்புநிலை மக்கள் அல்லாமல் அவர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் புறந்தள்ளப்பட்ட மக்கள் அல்லது மனிதர்கள் இந்த சமூகத்தால் இன்றைக்கும் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்களாக இருப்பதால் அவர்கள் கவனம் பெறுவதில்லை. அதாவது விளிம்பின் விளிம்பாலும் புறந்தள்ளப்படும் அல்லது கண்டுகொள்ளப்படாத இத்தகைய மனிதர்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கு இன்றைய உலகமயச் சூழல் முழுமையான காரணமாக இருக்கிறதை நாம் அவதானிக்க முடியும்.
இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அவர் யார் என்ன என்ற வினாக்களை எழுப்பி அவரை தேட முனையும் போது அவர் சாதிய கட்டுமானத்தை ஏதாவது ஒரு அடுக்கில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாம் அறிந்தவை. அடையாளங்களை கடந்த ஒரு தனிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அல்லது, தன்னை தள்ளிக்கொண்டு வந்த அந்த மனிதன் இன்றைக்கு விலை அரசியலுக்குள் குரல் கொடுக்க முடியாத நபராக, விளிம்புநிலை அரசியல் தளத்தில் அவருக்காக குரல் கொடுக்கும் மனிதர் இல்லாத களத்தில் அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
மீசை என்பது வெறும் மயிர்
மீசை என்பது வெறும் மயிர்
கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்
கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...
-
அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல் நாடுபிடிக் கொள்கையோடு மன்னராட்சி காலத்தில் நடந்தேறிய அந்நியப் படையெடுப்ப...
-
மீசை என்பது வெறும் மயிர் சாதி, சமயம் கடந்து மனித சமத்துவத்திற்காகப் போராடிய ஆளுமைகளை (பெரியார், அம்பேத்கர் போன்றோரை) அந்தச் சட்டகத்...